Wednesday, May 7, 2014

அண்ணல் - 3 (மூன்று கேள்விகள்)


மூன்று கேள்விகள்

சோழனின் அரசவையில்
ஆணவத்தின் உருவமாக இருந்தான்
ஆக்கியாழ்வான் என்னும் கோலாஹலன்
அரசவைப் பண்டிதன்.

செருக்கின் காரணமாக
மற்ற அறிஞரை வெறுத்தான்.
கப்பம் செலுத்தச் சொல்லி
கொக்கரித்தான்

ஆளவந்தாரின் குருவுக்கும்
ஒலையனுப்பினான்
ஆக்கியாழ்வான் ஓலைகண்டு வேதனையால்
தாக்கப்பட்டார் குருநாதர்

சீடனுக்குக் குருவின்
துன்பம் காணச் சகிக்கவில்லை
மூடனின் ஓலையை
மூலையில் கிழித்தெறிந்தான்

விடயமறிந்த வீணன்
முடிவிலாத சினமுற்றான்
ஆரென அறிந்துவரும்படி
ஆளனுப்பினான்

வைகுண்டத்து இறைவன் இருக்க
கலங்குவாரோ யமுனைத் துறைவன்?

கரிமுகம் பிளந்துகொல்லும்
அரிகள் யாம்; கவிக ளல்லர்
கப்பம் செலுத்தோமெனக்
பதிலிறுத்தார்.

வெறிகொண்ட ஆக்கியும்
அரசனிடம் புகலடைந்தான்.
உடனே வருகவென
அரசாணைப் பறந்தது.
ஆளவந்தார் அதையும் கிழிக்க
அதுவும் காற்றில் பறந்தது


தக்க மரியாதைகளுடன்
சிவிகையினை அனுப்பினால்
அக்கணமே வருவாரென
அரசியார் சொல்ல

அதுபோலே சிவிகையில்
ஆளவந்தாரைத் தருவித்தான்.

பல்லக்கில் ஏறிவந்தார்
பாலகன் யமுனைத்துறைவன்

என்னை வென்றிட ஆளுண்டோவென
ஆக்கியாழ்வானிடம் எழுதிக் காட்டினான்

தருக்கம் செய்துந்தன்
செருக்கடக்குவேன் என்று
சபதம் செய்தான் பண்டிதன்.

மனம் கலங்கினான் மன்னன் பால்
மணம் மாறாப் பிள்ளையைக் கண்டு.

அஞ்சேல் என்றாள் அரசி.
ஒருதுளி மோர் ஒருகுடம் பாலைத்
திரிக்கும்
சிறுதுளி பனியே உயர்ந்த மலையை
மறைக்கும் என்றாள்.

நீ தோற்றால் உன்னை
நாடு கடத்துவேன்
நான் தோற்றால் என்
நாட்டில் பாதி இவனுக்களிப்பேன்
என்றான் சோழன்.

சபை கூடியது.
தோல்வி வெற்றி தீர்மானிக்க
நடுவர் குழுவும் அமர்ந்தது.

கோலாஹலன் கேள்விகளுக்கு
பாலகன் பதிலிறுத்தார்.
பண்டிதன் மனம் தளர்ந்தான்.

கேள்விக்கணைத் தொடுக்க
குழந்தைக்கு வாய்ப்பு

சான்றோக்கு முன்னால் நான்
மூன்று வினா தொடுப்பேன்
பண்டிதரே அவற்றை மறுத்துப்
பதில் நீரும் சொல்லுமென்றான்

உன்னன்னை மலடியில்லை
மன்னனிவன் பேரரசன்
மகாராணியோ பதிவிரதை

இவற்றை மறுத்துநீர் சொன்னால்
உம் பாதம் பணிவேன் என்றான்.

பண்டிதன் திகைத்தான்
பார்த்தவர் நகைத்தார்

நீரே விடையிறும் என்றான்.

அறிஞரைத் துன்புறுத்தும்  பிள்ளை
பெறுதலும் பெறாமையும் ஒன்றே.
ஆதலால் உம் தாய் மலடி

அகிலம் ஆண்டாலே பேரரசன்
இவரோ இந்நாட்டு மன்னர்
ஆதலால் இவர் பேரரசரில்லை

சோமன் கந்தருவன் அக்கினி
ஆட்கொள்வார் மும்மூன்று ஆண்டு
பின்னரே பெண்ணுக்கு இங்கு
கன்னிகா தானம் அதனால்
மகாராணி பதிவிரதை என்பது
மறைகளுக்கு ஒவ்வாத ஒன்று

ஆதலால் அவள் பதி விரதையில்லை

துறைவனின் பதிலைக் கேட்டு
உறைந்தனர் அரச அவையினர்

மன்னரின் சொல்மீறி யதையிவர்
மறைமுகமாய் சொன்னாரெனத் தெளிந்து

'எம்மை ஆளவந்தீரோ?"
என்றிவர் அடிபணிந்தாள் அரசி.


No comments:

Post a Comment