இந்த யமுனைத்துறைவனின்
துறவுச் சீடர்களில் ஒருவர்தான்
இரும்பை காந்தம் இழுத்தாற்போலும்
எறும்பை சர்க்கரை அழைத்தாற்போலும்
துறைவனின் சித்தாந்தங்களில்
இறைவனைக் காண
ஆனமான சமயங்கள் ஆறுக்கும்
தானமாய் நின்ற ஞான பூரணன்
மேதினி மீதுழல் பொய்யர்க்கு
பாதநிழல் புகலிடம் தந்த மெய்யன்
ஐயன் யதிராஜன் ஆதிசேடன்
ஆழிசூழ் உலகும் வாழ்த்திடும்
இராமானுசன்.
யமுனைத் துறைவனின் சீடர்
ஸ்ரீசைல பூர்ணரின் சகோதரி காந்திமதி
திருவயிற்றில் வந்துதித்த
வைணவ வெளிச்சம்.
பிறவியிலேயே
பெறப்போகும் பெருமைகளின்
தெய்வீகச் சின்னங்களோடு பிறந்தவனைப்
பார்க்க வந்த பூரணர்
வைத்த பெயரே இராமானுசன்.
இளமையிலேயே
நூறு சூரியன் போலொளிர்ந்தார்
ஒருமுறை கற்றதை மறுமுறை கற்கும்
தேவையற்றவனானார் .
அடக்கமோடு இணைந்த அறிவால்
அனைவருக்கும் உற்றவனானார்
அவர் வாழ்ந்த பூதபுரியின்
அருகிலிருந்த காஞ்சியில்
காஞ்சிபூரணர் எனும் பக்தர் இருந்தார்.
அவரும் நாரணர் பக்தர்
துறைவன் சீடர்.
நித்தம் காஞ்சியிலிருந்து
பெருமாளை சேவிக்க
பூவிருந்தவல்லி வருவார்.
அப்படிப்பட்ட நாளொன்றில்
எதிராஜரைச் சந்தித்தார்.
மதுவால் ஈர்க்கப்பட்ட வண்டாக
உடையவர் ஈர்க்கப்பட்டார்.
உணவருந்த தனது இல்லத்துக்கு
ஆமந்தரித்தார்.
களிப்புடன் சென்றார்
காஞ்சிபூரணர்
போஜனம் முடிந்தபின்னர்
ராஜ உபசாரம்.
குலமிலான் குணங்குறியிலான்
இலக்குமி மணாளனை தாங்கும்
ஆதிசேடன் பூரணருக்கு
புரிந்தான் பாதசேவை!
அந்தணன் தன்பாதம் பிடிப்பதாவென
நொந்தார் காஞ்சிபூரணர்.
மனமுவக்கும் சேவைக்கு
முப்புரிநூல் தடைஎனில் களைந்ததனை
இனமற்று நிற்பேன் என்றார் உடையவர்.
உருகினார் அகமகிழ்ந்தார் பூரணர்.
இரவெலாம் நாரணனைப் பற்றி
உரையாடினார்கள்.
மறுநாள் காஞ்சி திரும்பினாலும்
மனதால் ஒன்றுபட்டனர்
மாதவனின் அடியார்கள் இருவரும்.
...வளரும்....